|
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 |
|||||
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 கிராமப் பஞ்சாயத்து ஆளுமை அறிமுகம்: தமிழகத்துள்ள மூன்றடுக்குப் பஞ்சாயத்து நிலைகளில் வலுவுள்ள அமைப்பாகக் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு திகழ்கின்றது. எனவே கிராமப் பஞ்சாயத்தின் முக்கியமான பங்குகள், கொடுக்கப்பட்டுள்ள அதிகாரவரம்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இவற்றை ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் ஆளுமை அமைந்தால் காந்தியடிகளின் கூற்றுப்படி கிராமப் பஞ்சாயத்தில் கிராம இராஜ்ஜியத்தை உருவாக்கிவிட முடியும். தமிழகத்தின் பல பஞ்சாயத்துக்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன என்பது நிதர்சனமான உண்மை. இவற்றின் முக்கிய காரணம் அப்பஞ்சாயத்துக்கள் சிறந்த ஆளுமைகளைப் பெற்றிருத்தல் ஆகும். இந்து தமிழ் திசை நாளிதழில் சஞ்சீவ் குமார் என்பவர் தமிழகத்தின் பல கிராமப் பஞ்சாயத்துகளுக்கு சென்று அவற்றைக் கட்டுரைகளின் வழி வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரைகள் ‘உள்ளாட்சி உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ என்னும் தலைப்பில் நூல்வடிவம் பெற்றுள்ளன. இந்நூலில் கேரளப் பஞ்சாயத்துக்கள் பற்றியக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதனை வாசிப்பதன் மூலம் சிறந்த ஆளுமைகளை அறிந்துக் கொள்ளலாம். பஞ்சாயத்து ஆளுமைகளின் பண்பு: இன்றைய காலகட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் என்பவர் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவருடைய திறனும் ஆற்றலும் உடையவராக இருத்தல் வேண்டும். பல கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களும் ஒரு மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் அளவிற்கு ஆற்றலுடையவர்களாகத் தமிழகத்தில் உள்ளனர். இத்தகைய ஆற்றல் அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களிடத்தில் இருக்க வேண்டும். ஒரு முன்மாதிரி கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கும் அவர்களின் புரிதலுக்கும் இதனைப்பற்றிய வழிகாட்டு கையேடுகளும் அளிக்கப்பட்டன. ஆனால் எந்த உறுப்பினராலும் பிரதமர் குறிப்பிட்ட மாதிரி பஞ்சாயத்தை உருவாக்க முடியவில்லை என்பது உண்மை. சிறந்த ஆளுமை நிறைந்த தலைவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை. தலைமையும் நேர்மையும்: கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இரு முக்கிய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஆட்சி செய்வது மற்றும் நிர்வாகம் செய்வது ஆகும். ஆட்சி மற்றும் நிர்வாகம் ஆகிய இரு பதவிகளைப் பெற்று அவற்றை ஆற்றலுடன் செயலாற்றத் தலைமைப்பண்பு மிகவும் அவசியமானதாக அமைகின்றது. இத்தகைய தலைமைப்பண்பு இருந்தால் கிராமத்தில் குட்டி குடியரசு ஆட்சியை உருவாக்கிவிட முடியும். சிறந்த தலைமைப்பண்புகளே சிறந்த ஆளுமைகளை உருவாக்குகின்றன. ஒரு தலைவருக்குச் சிறந்த துணிவையும் ஆற்றலையும் தருவது நேர்மையே ஆகும். நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வை உடையவரே சிறந்த தலைவராகின்றார். நேர்மை என்னும் பண்பே சிறந்த ஆத்ம சக்தியை நல்கும். எதனையும் எதிர்த்து நிற்கும் துணிவைத் தருவதும் நேர்மையே ஆகும். இப்பண்புகள் சிறந்த கிராமப் பஞ்சாயத்து ஆளுமைகளை உருவாக்கும் என்பது மறுக்க முடியாதது. சிறந்த ஆளுமை நபர்கள்: தமிழகத்தின் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆளுமை மிக்கவர்களாக உள்ளனர். அவர்களுள் ஓடந்துறை சண்முகம் என்பவர் மிகப்பிரபலமானவர். இவர் தன் பஞ்சாயத்தில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து தனக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை அரசாங்கத்திற்கு விற்பனை செய்யலாம் என்ற தன் கனவுத்திட்டத்தைச் செயலாற்றி பின் நடைமுறைப்படுத்தியவர். அடுத்ததாக ஜேசு அவர்கள் மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை தன் பஞ்சாயத்தின் மூலம் நடைமுறைப்படுத்தினார். இத்திட்டத்தை அன்றைய முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒப்புதல் அளித்து தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் அமல்படுத்த ஆணையிட்டார். இத்திட்டத்தின் மூலம் இப்பஞ்சாயத்துத்தலைவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி. சி வரை சென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அடுத்து இராமநாதபுரத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஜம்ருத் பீவி அவர்கள் அங்குள்ள இந்தக்கோவில்களில் மதப்பாகு பாடு பார்க்காமல் தன் பணியைச் சிறந்த முறையில் செய்து சாதனை புரிந்துள்ளார். இவரைப் போலவே கூத்தம்பாக்கம் இளங்கோ அவர்கள் தம் பஞ்சாயத்தில் உள்ள வீடுகளைக் குடிசைகளற்ற வீடுகளாக மாற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு அதில் சாதனை புரிந்துள்ளார். அனைத்துத்தலைவர்களுக்கும் சட்டம் என்பது சம அளவில் தரப்பட்டிருந்தாலும் மேற்கூறியத் தலைவர்கள் மட்டும் சாதனையாளர்களாக மாறியிருப்பதன் காரணம் அவர்கள் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்த காரணமே ஆகும். புன்சிரி கிராமப் பஞ்சாயத்துப் பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை அவர்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச்சென்ற போது தனக்கேற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘குஜராத் மாநிலத்தில் உள்ள புன்சிரி கிராமம் சிறந்த பஞ்சாயத்து அமைப்பு கொண்ட கிராமமாகும். இங்கு நடைபெறும் செயல்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடனே நடைபெறுகின்றன. மேலும் அதன் தலைவர் இளைஞராக இருந்தாலும் சிறந்த சாதனையாளராக அமைந்திருத்தலைக் காணமுடிந்தது. இதற்கு அரசின் பங்களிப்புடன் மக்களின் பங்களிப்பும் சரிசமமாக இருந்ததைக் காணமுடிந்தது.’ இவ்வாறு பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை அவர்கள் தம் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் சிறந்த ஆளுமையுடன் திகழ்வது எவ்வளவு அவசியம் என்பதை உணரலாம். ஊராட்சி மன்றம்: கிராம சபை, மக்கள் பாராளுமன்றம் எனில் ஊராட்சி மன்றம் என்பது மந்திரிசபையைப் போல நடைமுறைப்படுத்தக் கூடிய மன்றம் ஆகும். இம்மன்றத்தில் பல பதவிகள், குழுக்கள் உள்ளன. இத்தலைவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர். ஊராட்சி மன்றத்தலைவர் ஆளுகை செய்பவராகவும் செயலாற்றுபவராகவும் அமைந்துள்ளார். கிராம சபையும் கிராம ஊராட்சியும் எடுத்த முடிவுகளைச் செயலாற்றுபவராக ஊராட்சி மன்றத்தலைவர் அமைகின்றார். எனவே மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாக இப்பதவி அமைகின்றது. இப்பதவிகளில் சிறப்பாகச் செயலாற்றச் சிறந்த ஆளுமை தேவையாக உள்ளது. கூட்டங்களை நிகழ்த்துவதற்கும் இப்பண்பு மிகவும் அவசியமாகும். சாதாரண கூட்டம், சிறப்புக் கூட்டம், அவசர கூட்டம், வேண்டுகோள் கூட்டம் எனப் பலவகைகளில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றை நல்வழியில் ஒழுங்கமைத்துச் செயலாற்றச் சிறந்த ஆளுமைப்பண்பு அவசியம். கொடுக்கப்பட்ட விதிமுறைகளுள் அதிகார வரம்புக்குள் கூட்டம் நிகழ்த்தி அறிக்கையை உருவாக்கி அதனை அமல்படுத்துவது என இப்பதவியின் செயல்முறை அதிகமாகும். எனவே இவற்றைப் பற்றிய வழிகாட்டு கையேடு பதவிக்குரியவரிடம் இருக்க வேண்டும். கடமைகளின் பிரிவுகள்: பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் மூன்று முக்கிய கடமைகள் உள்ளன. அவையாவன, 1. கட்டாயக் கடமைகள் 2. விருப்பக் கடமைகள் 3. ஒப்பளிப்புப் பணிகள் ஆகியனவாகும். கட்டாயக் கடமைகள் என்பது கண்டிப்பாக நிகழ்த்த வேண்டிய பணிகளைக் குறிப்பனவாகும். இவற்றைச் செய்ய மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆற்றலுடையன. உதாரணமாக வீட்டுவரி, தொழில்வரி, நிலவரி ஆகியவற்றை வசூலித்தல், கிராம சொத்துக்களைப் பாதுகாத்துப் பராமரித்தல், கிராம சாலைகள் பாலங்கள் ஆகியவற்றைப் பராமரித்தல், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் பாதுகாத்து வழங்கல், வடிகால் கட்டுதல், பொதுக்கழிப்பிடம் கட்டிப்பராமரித்தல், கழிவுநீர் அகற்றல் ஆகியவை அனைத்தும் கட்டாயக்கடமைகளாகும். சுருக்கமாகக் கூறினால் ஓர் ஆண்டு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தும் அனைத்தும் கட்டாயக் கடமைகளாகும். விருப்பக்கடமைகள் என்பது தங்களின் விருப்பத்தின் பேரில் நடைபெறக்கூடியன. செய்ய வேண்டிய கட்டாயம் இப்பணியில் இல்லை. ஒப்பளிப்புப் பணிகள் என்பது அரசாங்கம் சில புதிய பணிகளைப் பஞ்சாயத்திடம் செய்யுமாறு ஒப்படைக்கும். இவை கட்டாயமாகச் செய்யக்கூடியன. நூறுநாள் வேலை போன்ற பணிகள் இதன்கீழ் நடைபெறக்கூடியவை ஆகும்.
|
|||||
by Lakshmi G on 19 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|